கும்பகோணத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கும்பகோணத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Feb 2020 12:30 AM GMT (Updated: 20 Feb 2020 7:43 PM GMT)

கும்பகோணத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் குமரன் தெருவில் ஆதி சாந்தகுண மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுதர்சனன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வழக்கம்போல் பூஜைகளை செய்து கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலையில் கோவிலின் நடை திறக்க வந்தபோது உண்டியல் உடைந்த நிலையில் காணப்பட்டது. அதில் இருந்த பணத்தையும் காணவில்லை. மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் கோவிலுக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் கோவிலுக்குள் வரும் மர்ம நபர்கள் 2 பேர் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story