மணல் கொள்ளையால் வெட்டாற்று பாலம் இடிந்து விழும் அபாயம் கிராம மக்கள் அச்சம்


மணல் கொள்ளையால் வெட்டாற்று பாலம் இடிந்து விழும் அபாயம் கிராம மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 21 Feb 2020 12:15 AM GMT (Updated: 20 Feb 2020 7:52 PM GMT)

மணல் கொள்ளையால் வெட்டாற்று பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மெலட்டூர்,

தஞ்சை மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, புதுஆறு உள்ளிட்ட ஆறுகள் செல்கின்றன. இந்த ஆறுகள் விவசாயத்துக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. ஆறுகளில் வரும் தண்ணீரின் அளவை பொறுத்தே சாகுபடி பரப்பளவு அமையும். இந்த ஆண்டு காவிரி மற்றும் கிளை ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் வந்ததன் விளைவாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பரப்பளவு அதிகரித்தது.

விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். தற்போது ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. தஞ்சையை அடுத்த மெலட்டூர் பகுதியில் செல்லும் வெட்டாற்றில் சிறிதளவே தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் ஆற்று மணலை கொள்ளையடித்து வருகின்றனர்.

இடிந்து விழும் அபாயம்

மெலட்டூர் அருகே காவலூர் தோட்டம் பகுதியில் வெட்டாற்றில் கட்டப்பட்டுள்ள நடைபாலம் அருகே மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூறுகிறார்கள். இங்கு மாட்டு வண்டிகள் மற்றும் வாகனங்கள் மணலை அள்ளி செல்ல வசதியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாலம் அருகிலேயே மணல் சுரண்டப்படுவதால் பாலத்தின் உறுதி தன்மை சீர்குலைந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

தடுக்க வேண்டும்

வெட்டாற்றில் வழித்தடம் அமைத்து மணலை கொள்ளையடிக்கிறார்கள். மணல் கொள்ளை தடங்கல் இன்றி தினசரி நடைபெற்று வருகிறது. மணல் கொள்ளை நீடித்தால் ஆறு மூலமாக பாசனம் பெறும் பகுதிகள் பாதிக்கப்படும். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாலம் அருகிலேயே அதிகளவில் மணலை தோண்டி எடுக்கிறார்கள். இதன் காரணமாக பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் காவலூர் தோட்டம் பகுதியில் உள்ள வெட்டாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story