ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன ஊழியரிடம் மடிக்கணினி திருடியவர் கைது


ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன ஊழியரிடம் மடிக்கணினி திருடியவர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2020 11:57 PM GMT (Updated: 20 Feb 2020 11:57 PM GMT)

தனியார் நிறுவன ஊழியரிடம் ஓடும் பஸ்சில் மடிக்கணினி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

சென்னை திருவான்மியூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் சாய் சங்கர் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவர் பணி நிமித்தமாக புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் வந்தார். பணி முடிந்தவுடன் புதிய பஸ் நிலையத்தில் சென்னை பஸ்சில் ஏறினார்.

அப்போது அவர் தன்னுடைய மடிக்கணினி பையை பஸ்சில் உடமைகளை வைக்கும் இடத்தில் வைத்திருந்தார். பஸ் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் அவருடைய மடிக்கணினி பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஓடும் பஸ்சில் மர்மநபர் யாரோ மடிக்கணினியை திருடியது தெரியவந்தது. உடனே பஸ்சில் இருந்து இறங்கிய அவர், உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

கைது

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக பஸ் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, சாய் சங்கரிடம் திருடிய மடிக்கணினி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், தூத்துக்குடியை சேர்ந்த உத்திரபாபு (வயது 38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.

Next Story