ஏ.டி.எம். எந்திரத்தில் ரகசிய கேமரா பொருத்தி தகவல்களை திருட முயன்ற நைஜீரிய வாலிபர் கைது மேலும் 2 வெளிநாட்டினருக்கு வலைவீச்சு


ஏ.டி.எம். எந்திரத்தில் ரகசிய கேமரா பொருத்தி தகவல்களை திருட முயன்ற நைஜீரிய வாலிபர் கைது மேலும் 2 வெளிநாட்டினருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Feb 2020 12:12 AM GMT (Updated: 22 Feb 2020 12:12 AM GMT)

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் ரகசிய கேமரா பொருத்திஏ.டி.எம். கார்டுதகவல்களை திருட முயன்ற நைஜீரிய நாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம்.மையம் உள்ளது. இங்குள்ளஎந்திரத்தில் ரகசிய குறியீட்டு எண் பட்டனை அழுத்தும் இடத்தின் அருகே ஒரு மர்மபொருள்மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர்,போலீசாருக்கு தகவல்தெரிவித்தார். உடனே லாஸ்பேட்டை போலீசார் விரைந்து வந்து ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள மர்ம பொருளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ரகசிய கேமரா, மெமரி கார்டு, பேட்டரி உள்ளிட்டவை இருந்தது. இதன் மூலமாக ஏ.டி.எம். கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு,ஏ.டி.எம். எந்திரத்தில் ரகசிய கேமராவை பொருத்திய நபரை தேடி வந்தனர்.

ஏ.டி.எம். எந்திரத்தில்உள்ள கண்காணிப்பு கேமராவைதனிப் படையினர்ஆய்வு செய்தனர். அப்போது வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் ரகசிய கேமராவை பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த வெளிநாட்டினர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பல்கேரியா நாட்டை சேர்ந்த மில்லன் அலெக்ஸ் சாண்ரோ, வெனிசுலாவை சேர்ந்த மில்டன் மற்றும் நைஜீரியாவை சேர்ந்த ஜாஷர் ஜெலத்தீன் (வயது 29) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதில் நைஜீரியாவை சேர்ந்த ஜாஷர் ஜெலத்தீன் சென்னையில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று ஜாஷர் ஜெலத்தீனை பிடித்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மரைன் கல்லூரி ஒன்றில் ஜாஷர் ஜெலத்தீன் என்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த ஆண்டு அவர் படிப்பை முடித்து விட்டார். அவர் ஒரு பாடப்பிரிவில் தோல்வி அடைந்ததால் அந்த தேர்வை எழுதுவதற்காக சென்னையில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், மில்லன் அலெக்ஸ் சாண்ரோ, மில்டன் ஆகியோருடன் இணைந்து புதுச்சேரிக்கு ஒரு காரில் வந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் ரகசிய கேமராவை பொருத்தியதை ஒப்புக்கொண்டார்.

அதையடுத்து ஜாஷர் ஜெலத்தீனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 மடிக்கணினி, ஒரு செல்போன் மற்றும் 6 ஏ.டி.எம். கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மில்லன் அலெக்ஸ் சாண்ரோ, மில்டன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ஏ.டி.எம். கார்டுகளின் தகவல்களை திருடி மோசடி செய்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ், ஏட்டு லியாகத், போலீஸ்காரர்கள் மணிமொழி, ரவிச்சந்திரன் ஆகியோரை சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஸ் ஆகியோர் பாராட்டினார்கள்.

Next Story