குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி குமரியில் முஸ்லிம்கள் 24 மணி நேர போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி குமரியில் முஸ்லிம்கள் 24 மணி நேர போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2020 11:30 PM GMT (Updated: 22 Feb 2020 4:47 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி குமரி மாவட்டத்தில் 2 இடங்களில் முஸ்லிம்கள் 24 மணி நேர போராட்டத்தை தொடங்கினர்.

நாகர்கோவில்,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதே போல குமரி மாவட்டத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 24 மணி நேர போராட்டம் நாகர்கோவில் இளங்கடையில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இளங்கடையில் சாலை ஓரம் ஷெட் அமைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

போராட்டத்துக்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சலீம் தலைமை தாங்கினார். தலைவர் அப்துல் ரகுமான், சத்தார் உள்பட திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோ‌‌ஷங்களையும் எழுப்பினார்கள்.

24 மணி நேர போராட்டம் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தக்கலை

இதே போல முஸ்லிம் ஜமாத் சார்பில் தக்கலை மக்காயிபாலயம் பள்ளி வாசல் முன் 24 மணி நேர போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு முஸ்லிம் ஜமாத் செயலாளர் சிராஜிதின் தலைமை தாங்கினார். குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின் ஆகிேயார் பேசினர். மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் உவேஸ், ஜெலில் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். 2 இடங்களிலும் போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு அங்கே சமைத்து வழங்கப்பட்டது.

Next Story