நகை கடைகளில் கொள்ளை: தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் கைது


நகை கடைகளில் கொள்ளை: தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2020 11:31 PM GMT (Updated: 22 Feb 2020 11:31 PM GMT)

மார்த்தாண்டம் பகுதியில் நகை கடைகளில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பத்மநாபபுரம்,

மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் கிறிஸ்டோபர் என்பவரின் நகை கடையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 90 பவுன் நகைகள் கொள்ளை போனது. இதேபோல், கடந்த மாதம் விரிகோடு மடத்துவிளையை சேர்ந்த பொன் விஜயன் வீட்டில் இருந்து 57 பவுன் நகையும், அவருக்கு சொந்தமான நகை கடையில் இருந்து சுமார் 1½ கிலோ நகையும் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி நகை கடைகளில் கொள்ளையடித்த எஸ்.டி. மங்காடு, புல்லாணிவிளையை சேர்ந்த எட்வின் ஜோஸ் (வயது 27) என்ற எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபரை கைது செய்தனர்.

அ.தி.மு.க. பிரமுகர்

அவரிடம் நடத்திய விசாரணையில் எட்வின் ஜோஸ் திருட்டு நகைகளை மார்த்தாண்டம் கோட்டகத்தை சேர்ந்த பழைய நகை வியாபாரி ரமேஷ் குமாரிடம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. ரமேஷ் குமார் குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை பொருளாளராக உள்ளார். இவர் திருட்டு நகைகளை குறைவான விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். எட்வின் ஜோஸ் போலீசில் சிக்கியவுடன் ரமேஷ் குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், திக்கணங்கோடு அருகே மாங்கோடு பகுதியில் நண்பரின் வீட்டில் ரமேஷ்குமார் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலையில் போலீசார் அந்த வீட்டை சுற்றிவளைத்து ரமேஷ்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story