குளச்சல் அருகே நள்ளிரவில் துணிகரம்: கப்பல் ஊழியர் வீட்டில் 21 பவுன் நகைகள் கொள்ளை


குளச்சல் அருகே நள்ளிரவில் துணிகரம்: கப்பல் ஊழியர் வீட்டில் 21 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 24 Feb 2020 12:00 AM GMT (Updated: 23 Feb 2020 7:18 PM GMT)

குளச்சல் அருகே கப்பல் ஊழியர் வீட்டில் நள்ளிரவில் 21 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் 4 வீடுகளில் திருட முயற்சி நடந்துள்ளன.

குளச்சல்,

குளச்சல் அருகே சலேட் நகரை சேர்ந்தவர் ஜாண்ரோஸ் (வயது 55). இவருடைய மகன்கள் இன்சென்ட் விஜூ (32), இன்சென்ட் வின்ஸ் (29). இவர்கள் 2 பேரும் வெளிநாட்டில் கப்பலில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களின் வீடுகள் சலேட் நகரில் அடுத்தடுத்து உள்ளன.

மகன்கள் வெளிநாட்டில் இருப்பதால் ஜாண்ரோஸ், அவருடைய மனைவி, மருமகள்களுடன் அங்கு வசித்து வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஜாண்ரோஸ் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். அருகில் உள்ள அவரது உறவினர்களும் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றனர்.

21 பவுன் நகை கொள்ளை

பின்னர் திருவிழாவிற்கு சென்று விட்டு ஜாண்ரோஸ் நள்ளிரவு வீடு திரும்பினார். வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அதில் இருந்த 21 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

வலைவீச்சு

அதேபோல், அருகில் உள்ள இன்சென்ட் வின்ஸ் மற்றும் 3 உறவினர்கள் வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை.

இதுகுறித்து ஜாண்ரோஸ் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story