திருத்துறைப்பூண்டியில் கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


திருத்துறைப்பூண்டியில் கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Feb 2020 11:00 PM GMT (Updated: 23 Feb 2020 8:11 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தேளிக்குளம் பிள்ளையார் கோவில் குளம் உள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் தேளிக்குளம் பிள்ளையார் கோவில் குளம் பஸ் நிறுத்தம் வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு செல்ல இந்த பஸ் நிறுத்தத்தில் ஏராளமானோர் இறங்கி நடந்து செல்கின்றனர்.

தேளிக்குளம் பிள்ளையார் கோவில் குளத்தில், முள்ளாட்சி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

துர்நாற்றம்

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதாலும், கழிவு நீர் கலப்பதாலும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியில் குடியிருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைய உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவு நீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குளத்தை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) வேதாரண்யம் சாலையில் இருந்து பாடை ஊர்வலம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

Next Story