அவினாசி அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை போலீசார் விசாரணை


அவினாசி அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 Feb 2020 10:06 PM GMT (Updated: 24 Feb 2020 10:06 PM GMT)

அவினாசி அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெரியாயிபாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்த மலைச்சாமி என்பவரது மகன் பிரபாகரன் (வயது 31). வாடகை வீ்ட்டில் குடியிருந்து வரும் இவர், அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி துர்கா (28). இவர்களுடைய மகன் ரித்திக் (1). கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பிரபாகரன் வேலைக்கு சென்று விட்டார். இதனால் வீ்ட்டில் துர்காவும், அவருடைய குழந்தையும் இருந்தனர். நேற்று மதியம் முதல் மாலை 6 மணிவரை துர்காவின் வீடு திறக்கப்படவில்லை. மேலும் வீ்ட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர், துர்கா குடியிருக்கும் வீ்ட்டின் கதவை தட்டி துர்காவின் பெயரை சொல்லி கதவை திறக்குமாறு கூறினார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர், வீ்ட்டின் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்துள்ளார். அப்போது வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில், துர்காவும், கட்டிலில் படுத்த நிலையில் குழந்தை ரித்திக்கும் கிடந்தனர்.

குழந்தையை கொன்று தாய் தற்கொலை

இதனால் அதிர்ச்சியடைந்த வீ்ட்டின் உரிமையாளர் இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீ்ட்டிற்கு சென்று தூக்கில் தொங்கிய துர்காவை மீட்டனர். அப்போது துர்கா உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. மேலும் கட்டிலில் படுத்த நிலையில் கிடந்த குழந்தை ரித்திக்கையும் போலீசார் பார்த்தனர். அப்போது அந்த குழந்தையும் இறந்து இருப்பது தெரியவந்தது.

மேலும் குழந்தையின் கழுத்தை கையால் நெரித்து கொன்றதற்கான தடயம் இருந்தது. எனவே குழந்தை ரித்திக்கை கழுத்தை நெரித்து கொன்ற துர்கா, அதன்பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தாய், குழந்தை இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பெற்ற குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவரது கணவரிடம் துருவி, துருவி விசாரித்து வருகின்றார். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனதால் ஆர்.டி.ஓ.விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Next Story