ஏற்காடு அருகே, சாலையை சீரமைக்க கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு


ஏற்காடு அருகே, சாலையை சீரமைக்க கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2020 11:30 PM GMT (Updated: 25 Feb 2020 8:13 PM GMT)

ஏற்காடு அருகே சாலையை சீரமைக்க கோரி அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

ஏற்காடு,

ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முளுவி கிராமம். இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேலைக்காகவும், மாணவர்கள் மேல்நிலைக்கல்வி மற்றும் கல்லூரி படிப்பிற்காகவும் ஏற்காடு வரவேண்டிய நிலை உள்ளது.

இந்தநிலையில் இந்த கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை கரடியூர் பிரிவு முதல் முளுவி கிராமம் வரை சேதம் அடைந்துள்ளது. இதனால் நேற்று காலை முளுவி கிராமத்திற்கு சென்ற அரசு பஸ்சை அந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தார்ச்சாலையை சீரமைக்க கோரி கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் கிடைத்ததும், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) குணசேகர் மற்றும் ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு ஆகியோர் முளுவி கிராமத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் சாலையை சரிசெய்து தரப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் அரசு பஸ்சை விடுவித்தனர். இதையடுத்து சீரமைக்க வேண்டிய சாலையை சரிசெய்ய அளவீடும் பணி நடந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஏற்காடு ஒன்றியக்குழு தலைவர் சாந்தவள்ளி அண்ணாதுரை மற்றும் துணைத்தலைவர் சேகர் ஆகியோர், ஒன்றிய அதிகாரிகளுடன் முளுவி கிராமத்திற்கு சென்று, சேதமடைந்த சாலையை பார்வையிட்டனர்.

பின்னர் அதிகாரிகள், அந்த சாலையை அளவீடு செய்து மொத்தமுள்ள 1.6 கிலோ மீட்டர் சாலையை சரி செய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்து நிதி அனுமதிக்காக உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Next Story