ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 1½ ஆண்டுக்கு பிறகு 4 பேர் கைது இரிடியம் மோசடி காரணமா? போலீசார் விசாரணை


ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 1½ ஆண்டுக்கு பிறகு 4 பேர் கைது இரிடியம் மோசடி காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 Feb 2020 10:30 PM GMT (Updated: 26 Feb 2020 9:20 PM GMT)

ஜலகண்டாபுரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இரிடியம் மோசடி காரணமாக இந்த கொலை நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேச்சேரி,

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள நாச்சம்பட்டி செலவடை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38), ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு சிவப்பிரியா (15) என்ற மகளும், தர்ஷன் (12) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்திவேல் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து தனது கணவர் மாயமானது குறித்து ரேவதி, ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், திடீர் திருப்பமாக 6 நாட்களுக்கு பிறகு சக்திவேல் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய பகுதியில் மர்ம கும்பலால் தாக்கி கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல் மாயமான வழக்கை கொலைவழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சரமாரியாக தாக்கி கொலை

கொலையுண்ட சக்திவேல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால், தமிழகம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று இடங்களை வாங்கி போட்டு கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அவருடன் கூட்டாளியாக இருந்த ஈரோடு பழைய ரெயில்நிலையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (41), ஈரோடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த புஷ்பராஜ் (40) ஆகியோர் சக்திவேலிடம் இருந்த பணத்தை கைப்பற்றிட திட்டம் போட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அவரை மேட்டுபாளையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர். அங்கு ஏற்கனவே திருப்பூர் மீனாட்சி நகரை சேர்ந்த வெங்கடேசன் (48), திருப்பூர் பத்மாவதி புரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த முருகபாண்டி (37) உள்பட 5 பேர் தயாராக இருந்துள்ளனர். அவர்கள் சக்திவேலிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கி உள்ளனர். ஆனால் அவர் பணம் இல்லை என்று கூறியதால், அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அங்கேயே வீசி விட்டு அவர்கள் திரும்பியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக சுமார் 1½ ஆண்டுகளுக்கு பிறகு ரியல் எஸ்டேட் அதிபர்களான சீனிவாசன், புஷ்பராஜ் மற்றும் வெங்கடேசன், முருகபாண்டி ஆகிய 4 பேரையும் ஜலகண்டாபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ேமலும் இரிடியம் மோசடியால் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story