எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு காட்டக் கூடாது: சகிப்புத் தன்மையை இழந்தால் அழிவு ஏற்படும் துணை ஜனாதிபதி பேச்சு


எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு காட்டக் கூடாது: சகிப்புத் தன்மையை இழந்தால் அழிவு ஏற்படும் துணை ஜனாதிபதி பேச்சு
x
தினத்தந்தி 27 Feb 2020 12:26 AM GMT (Updated: 27 Feb 2020 12:26 AM GMT)

எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு காட்டக் கூடாது. சகிப்புத் தன்மையை இழந்தால் அழிவு தான் ஏற்படும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

புதுச்சேரி,

புதுவை பல்கலைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு 225 பி.எச்டி., 40 எம்.பில், 202 தங்கப்பதக்கங்கள், 3,614 பட்டமேற்படிப்பு, 11,046 பட்டப்படிப்பு, 148 டிப்ளமோ, 2820 தொலைதூரக்கல்வி பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார்.

அப்போது வெங்கையா நாயுடு பேசியதாவது:-

புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து கட்டமைப்பும் உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியே முதல் நோக்கம். அதே நேரத்தில் அரசு அறிவிக்கும் திட்ட செயல்பாடுகளில் இணைந்து கொள்ளுங்கள்.

விவசாயமே அடிப்படை

மரம் நடுதல், நீர்நிலை தூய்மை ஆகிய சமூக பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். இதன் மூலம் பல்கலைக்கழக வளாகத்தை சிறந்த பசுமை பகுதியாகவும், நீர்சேமிப்பு பகுதியாகவும் மாற்றலாம். சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து வருவாயும் ஈட்டலாம்.

மாணவர்கள் தங்கள் கவனத்தை வகுப்பறையிலும், சமூகத்தின் மீதும் செலுத்த வேண்டும். கிராமப்புற மக்களின் பிரச்சினைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக விவசாயத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். அதுதான் நமக்கு அடிப்படையானது.

தாய்மொழிக்கு முன்னுரிமை

வெளிநாடுகளுக்கு செல்லுங்கள், வருமானம் ஈட்டுங்கள், ஆனால் மீண்டும் திரும்பி வந்து தாய் நாட்டுக்கு சேவையாற்றுங்கள். நாங்கள் படிக்கும் காலத்தில் இதுபோன்ற வசதிகள் இல்லை. உங்களுக்கு கிடைக்கும் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தாய்மொழிக் கல்வி என்பது மிகவும் அவசியம். பிற மொழிகளை கற்றறிவதில் தவறில்லை. இந்தி, ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள். முதல்-அமைச்சர் நாராயணசாமியின் புகழுக்கு காரணம் அவர் பல மொழி அறிந்ததுதான். அவருக்கு இந்தியும் தெரியும். எத்தனை மொழிகள் கற்றாலும் தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுங்கள். வீடுகளில் தாய்மொழியிலேயே பேசுங்கள்.

சகிப்புத்தன்மை

இளைஞர்களிடம் நேர்மை மனப்பான்மையே தற்போதைய தேவையாக உள்ளது. நிர்பயா விஷயத்தில் சட்டம் இயற்றுவது மட்டும் போதாது. அதை நடைமுறைப்படுத்துவதும் அவசியம். அதற்கு அரசியல் தைரியமும் தேவை. உலகிலேயே இந்தியாதான் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட நாடாக உள்ளது. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எல்லாவற்றுக்கும் எதிர்ப்புத்தன்மையை உருவாக்கக்கூடாது. ஒரு சிலர் அதேபோல் செய்கிறார்கள். உணர்ச்சி வசப்பட்டு சகிப்புத்தன்மையை இழந்துவிட்டால் அழிவுதான் ஏற்படும். ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை இருக்கிறது. போராட்டம் நடத்தலாம். ஆனால் அதற்கும் ஒரு கட்டுப்பாடு இருக்கவேண்டும். அனைவரும் சட்டம், சூழலை மதிக்கவேண்டும்.

உடல்நலத்தில் அக்கறை

பல்கலைக்கழக பட்டமளிப்பு உடையை இந்திய கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றுங்கள். ஆங்கிலேயர் காலத்து முறையையே இன்னும் கடைபிடிப்பது ஏன்?

உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். எனக்கு 71 வயது ஆகிறது. இருந்தபோதிலும் நாள்தோறும் ஒரு மணிநேரம் பேட்மிண்டன் விளையாடுகிறேன். யோகா செய்கிறேன். யோகா என்றால் அது மோடிக்கானது என்று நினைக்காதீர்கள். அது உங்கள் பாடிக்கானது (உடலுக்கானது). எனவே அனைவரும் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story