திருப்பூரில் பயங்கரம்: பெண் கழுத்தை நெரித்து கொலை சிறுவன் கைது


திருப்பூரில் பயங்கரம்: பெண் கழுத்தை நெரித்து கொலை சிறுவன் கைது
x
தினத்தந்தி 28 Feb 2020 11:45 PM GMT (Updated: 29 Feb 2020 12:18 AM GMT)

திருப்பூரில் பெண் கழுத்து நெரித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர், 

பீகார் மாநிலம் ஷம்புதம்திவில் அராசி கர்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாதியா. இவரது மனைவி ஷீலா தேவி (வயது 30). இவர்களுக்கு கோமன்குமார் (6), சத்தியம் குமார் (4) ஆகிய 2 மகன்களும், துளசி குமாரி (2) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் வாடகை வீட்டில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையின் போது மிதுன் தாதியாவிற்கும், ஷீலா தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மிதுன் தாதியா தனது குழந்தைகள் 3 பேரையும் அழைத்துக்கொண்டு, பீகாருக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

இதற்கிடையே ஷீலா தேவி மட்டும் அந்த வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஷீலா தேவியின் வீட்டு கதவு நேற்று காலை நீண்ட நேரம் திறக்கப்படாமல் சாத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் ஷீலா தேவி பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷீலா தேவியின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவருடைய கழுத்தில் காயம் இருந்தது. எனவே கழுத்தை நெரித்து ஷீலா தேவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஷீலா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

பின்னர் இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஷீலா தேவிக்கும், கொங்குநகரில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

கணவன் மிதுன்தாதியா வேலைக்கு சென்ற பிறகு, சிறுவனை வீட்டிற்கு வரவைத்து, அவனுடன் ஷீலா தேவி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிதுன் தாதியாவுக்கும், ஷீலா தேவிக்கும் தகராறு ஏற்பட்டு, அவர் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு பீகாருக்கு சென்று விட்டார். ஆனால் ஷீலா தேவி கணவருடன் ஊருக்கு போகாமல் திருப்பூரில் தங்கி விட்டார்.

கணவன் ஊருக்கு சென்றதால், தனியாக இருந்த ஷீலா தேவிக்கு சிறுவனுடன் அடிக்கடி தனிமையில் இருக்க வசதியாகிப்போனது. அதன்பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் ஷீலா தேவி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். எனவே ஷீலா தேவியுடன் தொடர்பில் இருந்த சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஷீலா தேவியை சிறுவன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். நேற்று முன்தினம் இரவு ஷீலா தேவியின் வீட்டிற்கு சென்ற சிறுவன் உல்லாசத்திற்கு ஷீலா தேவியை அழைத்துள்ளான். அவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இதனைத்தொடர்ந்து சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story