டெல்லி வன்முறையின் போது அமித்ஷா காணாமல் போய்விட்டார் சிவசேனா தாக்கு


டெல்லி வன்முறையின் போது அமித்ஷா காணாமல் போய்விட்டார்   சிவசேனா தாக்கு
x
தினத்தந்தி 29 Feb 2020 12:19 AM GMT (Updated: 29 Feb 2020 12:19 AM GMT)

டெல்லி வன்முறை சம்பவத்தின் போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காணாமல் போய் விட்டதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.

மும்பை, 

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சிவசேனா கடுமையாக சாடி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்தபோது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரத்துக்கு நீண்டநேரம் ஒதுக்கினார். வீடு, வீடாக சென்று பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தார். ஆனால் டெல்லியில் நடந்த வன்முறையில் பல உயிர்கள் பறிபோன போதும், பொது சொத்துகள், தனியார் சொத்துகள் நாசபடுத்தப்பட்ட போதும் அமித் ஷாவை எங்கும் காண முடியவில்லை.

இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியோ மத்தியில் ஆட்சியில் இருந்து எதிர்க்கட்சியாக பாரதீய ஜனதா இருந்து இருந்தால் உள்துறை மந்திரி பதவி விலக கோரி பாரதீய ஜனதா தனது கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பெரியளவில் கண்டன பேரணியையும் நடத்தி இருக்கும்.

எதிர்க்கட்சிகள் பலவீனம்

ஆனால், இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏனெனில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கிறது. இருப்பினும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டெல்லியில் நடந்த இவ்வளவு பெரிய வன்முறை குறித்து மத்திய அரசு காலதாமதத்துடன் பதில் அளிக்கிறது. ஆமதாபாத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை வரவேற்க அமித்ஷா இருந்த நேரத்தில் தான் டெல்லியில் உளவுத்துறை அதிகாரி வன்முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வன்முறை நடந்து 3 நாட்களுக்கு பின்னர் தான் பிரதமர் மோடி அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தேச விரோதமா?

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லி வீதிகளில் வந்து மக்களிடம் பேசினார். சேதங்கள் ஏற்பட்டு முடிந்த பின் நடவடிக்கை எடுத்து என்ன பயன்? நாடாளுமன்ற கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. அப்போது டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், அது தேசவிரோதம் என்று அழைக்கப்படுமா?. டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் அனைத்தும் கவலைக்குரியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story