காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் சேவை தொடர வேண்டும் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, சோனியாகாந்தி கடிதம்


காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் சேவை தொடர வேண்டும் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, சோனியாகாந்தி கடிதம்
x
தினத்தந்தி 9 March 2020 12:26 AM GMT (Updated: 9 March 2020 12:26 AM GMT)

காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் சேவை தொடர வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த நமச்சிவாயம் திடீரென மாற்றப்பட்டார். புதிய தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் கடந்த 5-ந் தேதி பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், ‘புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக பணியாற்றியதற்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து இருந்தார். மேலும் கட்சியை வலுப்படுத்த தொடர்ந்து பாடுபட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

கடிதம்

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, அமைச்சர் நமச்சிவாயத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக திறமையாக பணியாற்றியதற்காக எனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் மீதான உங்களது விசுவாசமும், சேவையும் என்றென்றும் தொடரும் என்றும், புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த புதுவை மக்களுக்காக உங்கள் சேவை தொடரும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story