உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்கள் தயாராக வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்கள் தயாராக வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 March 2020 11:44 PM GMT (Updated: 10 March 2020 11:44 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்கள் தயாராக வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் மகளிர் தினவிழா நேற்று நடந்தது. விழாவில் பளுதூக்குதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பாரதிதாசன் கல்லூரி மாணவி ஸ்ரீமதி, சிறந்த பெண் நூலகர் விருதுபெற்ற புதுவை பல்கலைக் கழக நூலகத்தில் பணிபுரியும் சம்யுக்தா, விவசாயத்துறையில் சாதனைகள் புரியும் லட்சுமி ஆகியோரை கவர்னர் கிரண்பெடி கவுரவித்தார். மேலும் தூய்மைப்பணியில் ஈடுபடும் பெண்களுக்கு ஒளிரும் உடைகளை வழங்கினார்.

விழாவில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

புதுவை மற்ற நகரங்களைவிட சுத்தமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் மகளிர்தான். நாம் தூங்கும்போது அவர்கள் நகரத்தை சுத்தம் செய்கிறார்கள். நான் வெளியில் இருந்து வந்ததால் அதை பாகுபடுத்தி பார்க்க முடிகிறது.

பெண்கள் பாதுகாப்பு

புதுவையில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு உள்ளது. இந்த சமூகம்தான் பாதுகாப்பினை கொடுத்து உள்ளது. புதுவையில் பெண்களுக்கு கல்வியறிவு அதிகம் உள்ளது. நகரம், கிராமத்தில் இருக்கும் பெண்கள் தங்களை ஏதாவது ஒரு பணியில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். படிப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

குறைந்த வருமானத்தில் தனது மகன், மகளை நல்ல முறையில் படிக்க வைத்த பெண் ஒருவருக்கு புதுவை பெண் என்ற விருதை வழங்கியுள்ளோம். புதுவை பெண்கள் நல்ல வலிமையுடன் உள்ளனர். நாம் நம்மிடம் உள்ளதை கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும்.

நிதிக்கசிவு

நம்மிடம் நல்ல குடும்பநல ஆலோசனை மையங்கள் உள்ளன. அங்கன்வாடி மையங்கள் பெண்கள், குழந்தைகளுக்கு சேவை செய்து வருகின்றன. ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான பணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால் எந்தவித நிதிக்கசிவும் ஏற்படுவதில்லை.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. துரதிர்ஷ்டவசமாக கடந்த 10 ஆண்டுகளாக இந்த தேர்தல் நடைபெறவில்லை. இந்த தேர்தல் நடந்தால் மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும்.

தேர்தலுக்கு தயாராகுங்கள்

இந்த தேர்தல் மூலம் உங்கள் தலைவரை நீங்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நீங்களே முன்னின்று செயலாற்றுங்கள். தேர்தலில் போட்டியிட தயாராகுங்கள். அடுத்த மகளிர் தினம் வரும்போது நிறைய உள்ளாட்சி பிரதிநிதிகள் அதில் பங்குபெற வேண்டும்.

ஒரு பெண் தலைமை ஏற்றால் குடும்பம் செழிக்கும். இளம் வயதில் பெண்களுக்கு திருமணம் செய்யாமல் படிக்க வையுங்கள். சுயமாக சொந்தக்காலில் நிற்கத்தான் அவர்கள் படிக்கிறார்கள்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார். 

Next Story