கெலமங்கலம் அருகே தொழிலாளி குத்திக்கொலை மைத்துனர் கைது


கெலமங்கலம் அருகே தொழிலாளி குத்திக்கொலை மைத்துனர் கைது
x
தினத்தந்தி 12 March 2020 10:30 PM GMT (Updated: 12 March 2020 5:22 PM GMT)

கெலமங்கலம் அருகே மது போதையில் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சலகிரியை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 27). தொழிலாளி. இவரது தங்கை லட்சுமிதேவி. அவரது கணவர் மூர்த்தி (24).

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மஞ்சலகிரியில் லட்சுமிபதி வீடு அருகில் லட்சுமிபதியும், மூர்த்தியும் ஒன்றாக அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி, தான் வைத்திருந்த கத்தியால் லட்சுமிபதியை சரமாரியாக குத்தினார்.

கொலை

இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த லட்சுமிபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லட்சுமிபதி இறந்து விட்டார். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்ட லட்சுமிபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமிபதியின் மைத்துனரான மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story