நாங்குநேரி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளிக்கூட மாணவன் சாவு குளித்துக் கொண்டிருந்தபோது பரிதாபம்


நாங்குநேரி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளிக்கூட மாணவன் சாவு குளித்துக் கொண்டிருந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 13 March 2020 10:30 PM GMT (Updated: 13 March 2020 2:38 PM GMT)

நாங்குநேரி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.

நாங்குநேரி, 

நாங்குநேரி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பள்ளிக்கூட மாணவன் 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். கூலி தொழிலாளி. அவருடைய மகன் சரவணன் (வயது 11). கரந்தாநேரி அரசு பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை சரவணன் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இறங்கி நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருந்தான். பின்னர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவனது குடும்பத்தினர் சரவணனை தேடிச் சென்றனர். கிணற்றின் கரையில் துணிமணிகள் மட்டும் கிடந்தது. அவனை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி மூன்றடைப்பு போலீசாருக்கும், நாங்குநேரி தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி வெகு நேரமாக தேடினர்.

பிணமாக மீட்பு 

ஆனால் அவர்களால் முடியவில்லை. கிணறு சுமார் 60 அடி ஆழம் உள்ளதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 5 மோட்டார்கள் மூலம் தண்ணீரை வாரி வெளியே இறைத்தனர். ஆனால் தண்ணீர் வற்றாமல் ஊறிக் கொண்டே இருந்தது.

பின்னர் இதுபற்றி தூத்துக்குடி முத்து குளிக்கும் வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்னர். கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் மூழ்கி தேடினர். மாலை 5 மணிக்கு சரவணன் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவனது உடலை பார்த்து பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது அங்கு கூடியிருந்த அனைவரின் கண்களையும் குளமாக்கியது.

சரவணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், கிணற்றில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக சரவணன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பள்ளிக்கூட மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story