உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 15 March 2020 11:30 PM GMT (Updated: 15 March 2020 8:38 PM GMT)

உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் நுண்கலை மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் டாக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங்கரை), சி.வி.ராஜேந்திரன் (பர்கூர்), கல்லூரி கல்வி இணை இயக்குனர் சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்து பேசியதாவது:- மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உயர்கல்வியில் 961 புதிய பாட பிரிவுகளும், தற்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் 12 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 5 பல்வகை கல்லூரிகள், 705 புதிய பாட பிரிவுகள், 8 முதுகலை பாட பிரிவுகள், 5 எம்.பில் பாட பிரிவுகள், 5 முனைவர் பாடதிட்டங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

பெண் கல்வி

தமிழ்நாட்டில் கிரு‌‌ஷ்ணகிரி உள்பட 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் தற்போதைய அ.தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் 2020 வரையில் 85 புதிய கல்லூரிகளையும், 1,666 புதிய பாட பிரிவுகள் உருவாக்கியதின் காரணமாக இந்திய அளவில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

உலக அளவில் உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கை விகிதம் 36 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பட்டம் படித்த பெண்களுக்கு ரூ.50,000-ம், தாலிக்கு தங்கம் 8 கிராம் வழங்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் சுய உதவி குழு வினருக்கு கடன், மகளிர் காவல் நிலையம், பணிக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், கல்பனா சாவ்லா விருது, அவ்வையார் விருது என எண்ணற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

சான்றிதழ்

தொடர்ந்து பல்கலைக்கழக தேர்வு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தன்னிறைவு திட்டம் மூலம் 50 லட்சம், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன பங்களிப்பு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கே.அசோக்குமார் (கிரு‌‌ஷ்ணகிரி கிழக்கு), பாலகிரு‌‌ஷ்ணரெட்டி (கிரு‌‌ஷ்ணகிரி மேற்கு), கல்லூரி முதல்வர் ஜெயந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.எம்.மாதையன், பால் உற்பத்தி கூட்டுறவு சங்க தலைவர் பி.கே.குப்புசாமி, ஒன்றியக்குழு தலைவர்கள் அம்சாராஜன், சசி வெங்கடசாமி, பையூர் ரவி, மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் நாராயணன், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன், முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story