தோவாளை அருகே விபத்து பஸ்சின் அடியில் சிக்கி 1 மணி நேரம் உயிருக்கு போராடிய முதியவர்


தோவாளை அருகே விபத்து பஸ்சின் அடியில் சிக்கி 1 மணி நேரம் உயிருக்கு போராடிய முதியவர்
x
தினத்தந்தி 16 March 2020 12:00 AM GMT (Updated: 15 March 2020 10:37 PM GMT)

தோவாளை அருகே மொபட் மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் பஸ்சின் அடியில் சிக்கி உயிருக்கு போராடிய முதியவர், 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆரல்வாய்மொழி,

தோவாளை அருகே வெள்ளமடம் சங்கனாபுதூரை சேர்ந்தவர் திரவியம்(வயது 70), தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இதனால், திரவியம் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலை திரவியம் தனது மொபட்டில் தோவாளைக்கு வந்தார். பின்னர், விசுவாசபுரத்தில் சாலையோரம் உள்ள பெட்ரோல் நிலையத்தில் மொபட்டுக்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அங்கு மொபட்டுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு மீண்டும் நெல்லை-நாகர்கோவில் சாலைக்கு வந்தார். அப்போது, சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வேகமாக வந்த ஆம்னி பஸ் ஒன்று மொபட் மீது மோதியது.

சக்கரங்களுக்கு இடையில்...

பஸ் மோதிய வேகத்தில் மொபட் தூக்கி வீசப்பட்டு சிறிது தூரம் தள்ளி விழுந்தது. மொபட்டில் வந்த திரவியம் பஸ்சின் பின் சக்கரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டார். பஸ்சுக்கு அடியில் திரவியம் சிக்கியதை அறிந்த டிரைவர் உடனே, பஸ்சை நிறுத்தினார்.

இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து ரோந்து போலீசார் மற்றும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, ஆம்னி பஸ்சின் பின் சக்கரங்களுக்கு இடையில் சிக்கிய திரவியம் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தீவிர சிகிச்சை

அவரை போலீசார் சுமார் 1 மணிநேரம் போராடி மீட்டனர். பின்னர், தயாராக நின்ற 108 ஆம்புலன்சு மூலம் அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story