கொரோனா வைரஸ் எதிரொலி: திருச்சி-இலங்கை விமானத்தின் மாலை நேர சேவை ரத்து


கொரோனா வைரஸ் எதிரொலி: திருச்சி-இலங்கை விமானத்தின் மாலை நேர சேவை ரத்து
x
தினத்தந்தி 17 March 2020 12:00 AM GMT (Updated: 16 March 2020 4:44 PM GMT)

கொரோனா வைரஸ் எதிரொலியாக திருச்சி-இலங்கை விமானத்தின் மாலை நேர சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

செம்பட்டு,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் ஒரு சில சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானத்தின் காலை மற்றும் இரவு நேர சேவை ரத்து செய்யப்பட்டது.

தற்போது திருச்சியில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமானது தனது சேவையை குறைத்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் காலை 9.10 மணிக்கு வந்து 10.10 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கி செல்லும். இதேபோன்று மாலை நேரத்தில் 3.05 மணிக்கு திருச்சிக்கு வந்து 4.05 மணிக்கு இலங்கை நோக்கிப் புறப்பட்டுச் செல்லும். இந்த விமானத்தின் மாலைநேர சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது. இதேபோல் இந்த விமானம் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய நாட்களிலும் மாலைநேர சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் முன்பதிவு செய்பவர்களுக்கு காலை நேர விமான சேவையில் இடம் அளிக்கப்படும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலிண்டோ விமான சேவை நேரம் மாற்றம்

இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மற்றும் மலிண்டோ விமானம் திருச்சிக்கு இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் எதிரொலியாக ஏர் ஏசியா நிறுவனம் காலை மற்றும் இரவு நேர சேவைகளில் ஒன்றினை ஏற்கனவே ரத்து செய்துள்ளது. ஆனால் மலிண்டோ விமானம் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் இரவு 10.35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் இரவு 11.25 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி செல்லும் விமான சேவையானது நாளை மற்றும் 20, 22, 25 மற்றும் 27-ந்தேதிகளில் மட்டும் இரவு 10.45 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து இரவு 11.35 மணிக்கு கோலாலம்பூருக்கு இயக்கப்படும். மேலும் ஏப்ரல் மாதத்தில் 1, 3, 8, 10 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து இரவு 11.35 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி செல்லும் மலிண்டோ விமானத்தின் சேவை இருக்கும். மற்ற நாட்களில் இந்த சேவை இருக்காது. பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story