கர்நாடக வனப்பகுதியில் இருந்து போடூர்பள்ளத்திற்கு வந்த 42 யானைகள் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை


கர்நாடக வனப்பகுதியில் இருந்து போடூர்பள்ளத்திற்கு வந்த 42 யானைகள் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 March 2020 11:00 PM GMT (Updated: 16 March 2020 7:33 PM GMT)

கர்நாடக வனப்பகுதியில் இருந்து போடூர்பள்ளத்திற்கு 42 யானைகள் வந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர்,

கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லைப்பகுதிகளான அஞ்செட்டி, உரிகம், தேன்கனிக்கோட்டை, தளி, சானமாவு, ஆழியாளம், போடூர்பள்ளம் ஆகிய பகுதிகளுக்கு காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. கடந்த 2 மாதத்திற்கு முன்பு போடூர்பள்ளத்திற்கு வந்த யானை கூட்டம், அப்பகுதியில் உள்ள பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தன. பின்னர், வனத்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு அந்த யானைகளை, கர்நாடக மாநிலம் கோலார் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், கர்நாடக வனப்பகுதியிலிருந்து 42 யானைகள் மீண்டும் போடூர்பள்ளத்திற்கு வந்தன. பின்னர் இந்த யானைகள், தனித்தனியாகவும், பல குழுக்களாகவும் பிரிந்து கிராமப்பகுதிகளின் அருகே சுற்றித் திரிகின்றன.

வனத்துறையினர் எச்சரிக்கை

தற்போது, அத்திமுகம், பேரிகை, ஏ.செட்டிப்பள்ளி, குண்டுகுறுக்கி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இந்த யானைகள் முகாமிட்டுள்ளதையடுத்து, கிராம மக்கள் தங்கள் விவசாய நிலத்திற்கு செல்லும்போதும், சாலைகளை கடக்கும்போதும், இரவு நேரங்களிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், இது சம்பந்தமாக, வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த 42 யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story