கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க வேண்டும்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 March 2020 11:00 PM GMT (Updated: 16 March 2020 7:49 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளிமாநில தொழிலாளர்களை அரசு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலையில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய அனுமதியின்றி அரசுத்துறை அலுவலர்கள் தங்கள் அலுவலகங்கள் மூலமாக கூட்டங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. அரசுத்துறை அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் கைகளை கழுவுவதற்காக சோப் மட்டுமல்லாது கிருமிநாசினி திரவங்களையும் வைத்திருக்க வேண்டும்.

சுற்றுலா அழைத்து செல்ல கூடாது

அரசுத்துறை அலுவலர்கள் துறை ரீதியாக மற்ற மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவோ, திட்டங்களை பார்வையிடவோ உரிய அனுமதி பெறாமல் செல்ல கூடாது. பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் கொரோனா பாதிப்பு உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தங்கள் மாணவ, மாணவிகளை வெளி மாநிலங்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ சுற்றுலா மற்றும் பிற காரணங்களுக்காக அழைத்து செல்ல கூடாது. பொதுமக்கள் அதிகம் வரும் அலுவலகங்களில் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் கைகளை சுத்தம் செய்ய கைகழுவும் அமைப்பை ஏற்படுத்துவதோடு, அதற்கு தேவையான பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க உடனடியாக இந்த அமைப்புகளை தங்கள் அலுவலகங்களில் ஏற்படுத்திய பேரூராட்சி, நகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு அலுவலரும் தங்கள் அலுவலகங்களில் உள்ள பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக 2 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் பாதிப்பு இருந்தால் சுகாதார துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். ஓட்டல் மற்றும் திரையரங்குகளுக்கு வரும் பொதுமக்கள் கைகளை கழுவுவதற்காக சோப் மட்டுமல்லாது கிருமிநாசினி திரவங்கள் வைக்கப்பட்டு உள்ளதா? என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது சுகாதாரத்துறை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தொழில் நிமித்தமாக நமது மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று வர வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு சென்று வந்த தொழிலாளர்களின் விவரங்களை உள்ளாட்சி நிர்வாகத்தினர் வருவாய் துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைவரும் பின்பற்றி கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிப்பு

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் மற்றும் ரிக் தொழில் அதிகளவில் உள்ளது. இதில் வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். எனவே வெளிமாநில தொழிலாளர்களை அரசு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மகளிர் திட்ட இயக்குனர் டாக்டர் மணி, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) சாந்தி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சோமசுந்தரம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story