ஆர்.எஸ்.மங்கலம் அருகே நகைக்காக பெண் கொலை


ஆர்.எஸ்.மங்கலம் அருகே நகைக்காக பெண் கொலை
x
தினத்தந்தி 17 March 2020 11:30 PM GMT (Updated: 17 March 2020 9:09 PM GMT)

ஆர்.எஸ்.மங்கலம் அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஓடக்கரை கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காஞ்சனா(வயது 39).

இவர்களுக்கு அபிநயா(19), ஹரிகரன்(16) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் விறகு பொறுக்குவதற்காக காஞ்சனா ஊரின் அருகே கருவேல மரம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.

கொலை

ஆனால் மாலை 6 மணி வரை அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடிப்பார்த்துள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் காஞ்சனா கழுத்தில் சேலை இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையையும் காணவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து காஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக்காக காஞ்சனா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story