முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.25 கோடி மோசடி; முன்னாள் ராணுவ வீரர் கைது


முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.25 கோடி மோசடி; முன்னாள் ராணுவ வீரர் கைது
x
தினத்தந்தி 19 March 2020 12:30 AM GMT (Updated: 18 March 2020 6:57 PM GMT)

முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.25 கோடி வசூலித்து மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் மணி (வயது 44). முன்னாள் ராணுவ வீரர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரபலமான சிமெண்டு தொழிற்சாலையில் அதிகாரியாக வேலை செய்வதாகவும், அந்த தொழிற்சாலையில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ.22 ஆயிரத்து 500 ஆதாய தொகையும், குறிப்பிட்ட மாதத்துக்கு பின்னர் செலுத்திய முழு தொகையையும் திருப்பி தந்துவிடுவதாக பலரிடம் மணி கூறியதாக தெரிகிறது. இதேபோல் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறார்களோ அந்த அளவுக்கு அதிக வட்டி தரப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை நம்பி கோவை போத்தனூர் கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்த லாரா வின்னரசி (35) என்பவர் ரூ.5¼லட்சத்தை மூன்று தவணைகளில் முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு ஆதாய தொகையும், அவர் செலுத்திய தொகையையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதுகுறித்து லாரா வின்னரசி கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

ரூ.25 கோடி மோசடி

பொருளாதார குற்றப்பிரிவுபோலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோர் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தினார்கள். இதில், முன்னாள் ராணுவ வீரர் மணி, கர்நாடக மாநிலம் ஹூபிளி அருகே உள்ள சாமராஜங்கரா பகுதியை சேர்ந்த மஞ்சுநாதா(35) என்பவருடன் சேர்ந்து கொண்டு ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

முன்னாள் ராணுவ வீரரான மணி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள், முன்னாள்ராணுவ வீரர்களை அணுகி கூடுதல் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி 500 பேரிடம் ரூ.25 கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் ஆன்லைன் மூலம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர் கைது

இதைத்தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடி, கூட்டுசதி, முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து முன்னாள் ராணுவ வீரர் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மஞ்சுநாதாவை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மோசடி பணத்தில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னாள் ராணுவ வீரர் மணியிடம் பணத்தை இழந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் தொடர்ந்து புகார் செய்துவருகிறார்கள்.இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story