பொம்மிடி அருகே கிணற்றில் பெண் பிணம் சாவில் சந்தேகம் என தந்தை போலீசில் புகார்


பொம்மிடி அருகே கிணற்றில் பெண் பிணம் சாவில் சந்தேகம் என தந்தை போலீசில் புகார்
x
தினத்தந்தி 18 March 2020 11:00 PM GMT (Updated: 18 March 2020 7:40 PM GMT)

பொம்மிடி அருகே கிணற்றில் பெண் பிணமாக மிதந்தார். மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை ேபாலீசில் புகார் செய்துள்ளார்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ஜங்காலப்பட்டியை சேர்ந்தவர் தீர்த்தகிரி. பொக்லைன் டிரைவர். இவருடைய மனைவி பரணி (வயது27) இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தீர்த்தகிரி கோவையில் தாங்கி வேலை செய்து வருகிறார். இதனால் பரணி மாமியாருடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை தீர்த்தகிரியின் தாயார் சின்னத்தாய் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் பரணி பிணமாக மிதந்தார். இதுகுறித்து சின்னத்தாய் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உறவினர்கள், கிராமமக்கள் திரண்டு வந்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடல் மீட்பு

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து பரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக பரணியின் தந்தை அண்ணாமலை பொம்மிடி போலீசில் புகார் செய்தார்.

இதனிடையே நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து பரணியின் உடலை ஜங்காலப்பட்டிக்்கு உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். அப்போது பரணியின் உடலை, தீர்த்தகிரி வீட்டு முன்பு தான் புதைக்க வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொம்மிடி போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து இறந்த பெண்ணின் உடல் வீட்டில் இருந்து சுமார் 15 அடி தூரத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. பரணி கிணற்றில் குதித்து தற்ெகாலை செய்து கொண்டாரா?, அல்லது அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story