சேலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


சேலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 March 2020 12:00 AM GMT (Updated: 18 March 2020 8:25 PM GMT)

சேலத்தில் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சேலம்,

சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் எதிரே முதலியார் காட்டில் ஒரு தனியார் நிறுவனத்தின் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தில் இறங்கினால் நிலத்தடி நீர் மாசுபடும். இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும். இதேபோல் எருமாபாளையம் காட்டு ஏரி அருகில் இருப்பதால் ஊரின் ஒட்டுமொத்த குடிநீர் மாசுபட்டு பொதுமக்களுக்கு உடல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். பள்ளி எதிரே கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைவதால் 200-க் கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நடவடிக்கை

இந்த ஆலை நிறுவப்பட்டால் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் வேதிபொருட்களை எரிக்கும் போது சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசு அடையும். ஆலை அமையும் பட்சத்தில் கனரக வாகனம் மூலமாக கழிவுநீர் எடுத்துவரப்படும். எனவே போக்கு வரத்து நெரிசல் ஏற்படு வதோடு, சாலையும் அடிக்கடி பழுதடையும். மேலும் ஏற்கனவே எங்கள் பகுதியை சுற்றி மண்ணுக்கும், மக்களுக்கும் தீங்கு விளைவிக்ககூடிய பல தொழிற்சாலைகள் இருப்பதால் மீண்டும் இதுபோன்ற அபாய ஆலைகள் வேண்டாம். இந்த ஆலை வராமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைக்கேட்ட போலீசார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு, போலீசாரிடம் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story