ஆள்வைத்து கத்தியால் வெட்டிக்கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


ஆள்வைத்து கத்தியால் வெட்டிக்கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 19 March 2020 4:23 AM IST (Updated: 19 March 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

கட்சியில் பதவி பெறுவதற்காக ஆள்வைத்து கத்தியால் இந்து மக்கள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொண்ட பரபரப்பு தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெருமாநல்லூர்,

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபால்(வயது 48). இவர் அதே பகுதியில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து உள்ளார். அதோடு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளராகவும் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு நந்தகோபால் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றபோது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் தன்னை வழிமறித்து கைகள் மற்றும் தோளில் கத்தியால் வெட்டியதாக கூறி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி அறிந்ததும் இந்து மக்கள் கட்சியினர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று திரண்டனர்.கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓம்கார் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து நந்தகோபால் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்ததும்மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா, போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் ஆகியோர் நேற்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இந்து மக்கள் கட்சி நிர்வாகி தாக்கப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும்கணக்கம்பாளையத்தில் பதற்றம் நிலவியது.

இதனால் சம்பவம் நடந்த இடத்தில் மத்திய அதிவிரைவுப்படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

நந்தகோபால் அளித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.



 

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நந்தகோபால் கட்சியில் பதவி பெற சுய விளம்பரத்துக்காக தனது கார் டிரைவரான ருத்ரமூர்த்தியுடன்(20) சேர்ந்து திட்டமிட்டு தாக்குதல் நாடகத்தை அரகேற்றியது தெரியவந்தது.

இந்தநிலையில் டிரைவர் ருத்ரமூர்த்தி திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபுவிடம் சரண் அடைந்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் ஏற்கனவே திட்டமிட்டபடி நந்தகோபாலை தான், கத்தியால் முதுகில் கிழித்ததாகவும், அதன்பிறகு நந்தகோபால் தனது இரண்டு கைகளிலும் வெட்டுக்காயத்தை ஏற்படுத்திக்கொண்டு அந்த காயத்தை மாற்று மதத்தினர் மற்றும் காவி வேட்டி கட்டியவர்கள் ஏற்படுத்தியதாகவும், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்றும், கட்சியில் பதவி பெற நினைத்தும் இந்த செயலை நந்தகோபால் செய்ததாக ருத்ரமூர்த்தி கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தாசில்தார் பாபு, ருத்ரமூர்த்தியை பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஆஜர்படுத்தினார். அதன்பிறகு இந்த வழக்கின் சட்டப்பிரிவுகளில் மாற்றம் செய்து ருத்ரமூர்த்தி, நந்தகோபால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நந்தகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுபோன்ற சுய விளம்பரத்துக்காக பொதுமக்கள் மற்றும் மாற்று மதத்தினரிடையே கலகம் ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் நபர்கள் மீது உரிய சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் எச்சரித்துள்ளார்.

1 More update

Next Story