கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: முகக்கவசம், கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு; மருந்துக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: முகக்கவசம், கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு; மருந்துக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 18 March 2020 10:57 PM GMT (Updated: 18 March 2020 10:57 PM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியால் திருப்பூர் மாவட்டத்தில் முகக்கவசம், கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றை வாங்க மருந்துக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடைபெற்றது.

பொதுமக்கள் கூடும் இடங்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்தபடி சென்றனர். மாநகரில் பஸ் நிலையங்கள், கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருப்பூர் மாநகரில் உள்ள மருந்துக்கடைகளில் முகக்கவசம், கிருமிநாசினி வாங்குவதற்கு மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. காலை முதல் அதிகம் பேர் வந்து மொத்தமாக முகக்கவசம், கிருமிநாசினியை வாங்கிக்சென்றனர்.

இதன்காரணமாக மாநகரில் கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுபோல் முகக்கவசமும் மருந்துக்கடைகளில் விற்று தீர்ந்து விட்டதால் அதற்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுபோல் மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி, முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிருமிநாசினி, முகக்கவசத்தின் தேவை அதிகரித்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் அவற்றை தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் கிருமிநாசினி, முகக்கவசம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருப்பூரில் உள்ள கோவில்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இளம்பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடியபடி சென்றனர். அரசு பஸ்கள், ரெயில்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், கடை வீதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் மூலமாக கிருமிநாசினி வைக்கப்பட்டு பொதுமக்கள் கைகழுவும் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.


Next Story