கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.22 லட்சம் மோசடி 2பேர் கைது


கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.22 லட்சம் மோசடி 2பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2020 11:00 PM GMT (Updated: 19 March 2020 10:40 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.22 லட்சம் மோசடி 2பேர் கைது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்டு ரோட்டில் மைக்ரோபைனான்ஸ் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. 5 ஆயிரம் ரூபாய் கட்டினால் ஒருலட்சம் ரூபாய் கடன் தருவதாக இந்நிறுவனம் பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான விளம்பரப்படுத்தியது.

இதனை நம்பிய பொதுமக்கள் சுமார் 440 பேர் நிதிநிறுவனத்தில் பணம் செலுத்தினார்கள். அந்த வகையில் சுமார் 22 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்காமல் நிதி நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவாகி விட்டனர். இது பற்றி தண்டலை காலனி மேற்கு தெருவைச்சோந்த ஜெகநாதன் என்பவர் உள்பட 30-க்கும் அதிகமானவர்கள் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிநிறுவன உரிமையாளர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நிதி நிறுவன உரிமையாளர்களான திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா அன்னகுடி அக்ரஹாரத்தை சேர்ந்த ரகுபதி மகன் வேதகிரி(வயது36), தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வாசல் நாடார் ரோடு மணி மகன் சுரே‌‌ஷ்(36) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் தங்கள் பெயரை முறையே கணே‌‌ஷ், சுகுமார் என மாற்றி தமிழகத்தில் மேலும் பல இடங்களிலும் நூதன முறையில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ஒரு கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story