அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் நர்ஸ் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை


அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் நர்ஸ் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 19 March 2020 11:00 PM GMT (Updated: 19 March 2020 10:49 PM GMT)

அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் நர்ஸ் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாலையம்பட்டி ராஜீவ்நகரை சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவரது மனைவி ராமலட்சுமி(வயது 50). இவர் கோபாலபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக உள்ளார். சத்தியமூர்த்தி இறந்து விட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார்.

நேற்றுகாலை இவர் வழக்கம்போல வேலைக்கு புறப்பட்டுள்ளார். வீட்டை பூட்டிய அவர் சாவியை வீட்டின் முன்பகுதியில் மறைவான இடத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதன் அவர் அங்கிருந்து சென்றவுடன் சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் சென்றுள்ளான்.

அங்கு பீரோவில் இருந்த 40 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டான்.

மாலையில் ராமலட்சுமி வீடு திரும்பியபோதுதான் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் டவுன் போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர்.

கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

அதேபகுதியில் உள்ள புளியம்பட்டியில் பள்ளி ஆசிரியையான கார்த்திகைசெல்வியின் வீட்டிலும் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இவர் வேலைக்கு சென்றதும் வீட்டின் பின்பக்கமாக மாடியில் ஏறி வந்த மர்ம நபர் முன்பக்க கதவை இரும்பு கம்பியால் உடைக்க முயற்சித்துள்ளார். முடியாததால் ஓடி விட்டார். மாலையில் வீடு திரும்பிய கார்த்திகைசெல்வி இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Next Story