கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை ரங்கசாமி வலியுறுத்தல்


கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை ரங்கசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 March 2020 11:52 PM GMT (Updated: 19 March 2020 11:52 PM GMT)

கொரோனா வைரசை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்றுநோய் இந்தியாவிற்கு வந்திருப்பது கவலை அளிக்கிறது. மத்திய அரசு பேரிடர் நிலையாக அறிவிக்கும் அளவுக்கு நாள்தோறும் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பல்வேறு மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதுபோல், புதுச்சேரி அரசும் போர்க்கால அடிப்படையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் சாதாரண நோய்களுக்கே மருந்து, மாத்திரைகள் இல்லை என்பதால் கொரோனாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தநிலையில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளை கூட்டி எல்லா மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சைகளுக்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இலவச முகக்கவசம்

மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா வைரசை தடுக்கும் கவச ஆடைகள் தேவையான அளவு வாங்கப்பட துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களுக்கு பொது இடங்களிலும், ரேஷன்கடைகளிலும் இலவசமாக முகக்கவசங்கள், கிருமிநாசினி, சோப்புகளும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

மாநில எல்லையில் நுழையும் அனைத்து ரெயில், பஸ் பயணிகளுக்கும் நவீன சோதனை கருவிகள் வைத்து முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். மேலும் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு நோய் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தட்டுப்பாடு

உயிர்காக்கும் சுவாச கருவியான வென்டிலேட்டர் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சோப்புகளுக்கும், கிருமி நாசினிகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அரசாங்கம் உடனடியாக இதை சரிசெய்யவேண்டும். நகரங்களை மட்டுமே கவனிப்பது போதாது. கிராம பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் மோதல்போக்கினை கைவிட்டு போர்க்கால அடிப்படையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பான உடைகளும், காலணிகளும், முகக்கவசங்களும் அளித்து அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிசெய்ய வேண்டும்.

ரூ.5 ஆயிரம் உதவித்தொகை

சாதாரண மக்களும், அன்றாட கூலித்தொழிலாளர்களும் வருமானம் இழக்கும் நிலை வந்திருக்கிறது. ஆகவே அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கவேண்டும்.

இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக பரவினாலும் இந்திய தட்பவெப்ப நிலையில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது ஆறுதலான செய்தி. ஆகவே மக்களும் அதிகம் பீதி அடையாமல் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ரங்கசாமி கூறியுள்ளார்.

Next Story