டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2020 10:15 PM GMT (Updated: 21 March 2020 4:03 PM GMT)

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை மேலத்திக்கான் ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் கூட்ரோடு அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை வைக்கப்பட்டது. இந்த கடையினால் பெண்கள் உள்பட பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கடை முன்பு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தகராறின் போது ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அந்த பகுதி பெண்கள் உள்பட பொதுமக்கள் அங்கு வந்து கடை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்த இடத்தில் கடையை மீண்டும் திறப்பது குறித்து போலீஸ் தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுளது. இதையடுத்து மீண்டும் அந்த கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் அந்த டாஸ்மாக் கடை வழக்கம் போல் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைக்கு 2 போலீசார் காவலுக்கு இருந்தனர்.

இதையடுத்து அங்கு மேலத்திக்கான் ஊராட்சி மன்றத்தலைவர் ராணிரவி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் அருண், செந்தில் மற்றும் பொதுமக்கள், இந்து முன்னணியினர் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் மேலத்திக்கான் ஊராட்சியில் கடந்த 5-ந் தேதி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இந்த டாஸ்மாக் கடையினால் இங்கு ஆடு, மாடு மேய்க்க வரும் பெண்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது என்றனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசினார். பின்னர் டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது. நிரந்தரமாக இந்த கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போலீசாரிடம் முறையிட்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

டாஸ்மாக் கடை மூடியபின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story