கடத்தூர் அருகே சோகம் 1½ வயது பெண் குழந்தையுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை போலீசார் விசாரணை


கடத்தூர் அருகே சோகம் 1½ வயது பெண் குழந்தையுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 March 2020 10:30 PM GMT (Updated: 21 March 2020 8:24 PM GMT)

கடத்தூர் அருகே 1½ வயது பெண் குழந்தையுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தா.அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது 28). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி பவளக்கொடி (24). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ரித்வித்திகா (1½) என்ற பெண் குழந்தை இருந்தது.

நேற்று முன்தினம் மாயக்கண்ணன் வேலைக்காக வெளியூர் சென்று விட்டார். இதையடுத்து வீட்டில் இருந்த பவளக்கொடி குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்துள்ளார்.

2 பேரும் சாவு

இதனால் தாயும், குழந்தையும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே தாய், குழந்தையை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி தாயும், மகளும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு, தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story