திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை


திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 4:54 PM GMT)

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மலைக்கோட்டை,

திருச்சி கோட்டை ஜான்தோப்பை சேர்ந்த ஒருவர் கடந்த பல வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் ஏலச்சீட்டில் கருவாட்டு பேட்டை, ஜான் தோப்பு, கமலா நேரு நகர், வடக்கு தாராநல்லூர், சின்ன செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பணம் செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் சீட்டு பணத்தை திரும்ப கொடுக்காமல் அந்த நபர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று காலை அந்த நபரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த நபரை பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கோடிக்கணக்கான ரூபாய்...

போலீசார் விசாரணையில், 100-க்கும் மேற்பட்டவர்கள் சீட்டு பணம் செலுத்தி ஏமாந்ததும், சீட்டு நடத்தியவர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது. இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் அந்த நபர், தான் திவால் ஆனதாக பணம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட் டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story