மனைவி, உறவினர்கள் கண் எதிரே சரக்கு ரெயில் மோதி கட்டிடத் தொழிலாளி பலி


மனைவி, உறவினர்கள் கண் எதிரே சரக்கு ரெயில் மோதி கட்டிடத் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 13 April 2020 10:30 PM GMT (Updated: 13 April 2020 10:25 PM GMT)

ஆந்திராவில் உள்ள தனது குழந்தைகளை பார்க்க மனைவி மற்றும் உறவினர்களுடன் தண்டவாளத்தில் நடந்து சென்ற கட்டிடத் தொழிலாளி, சரக்கு ரெயில் மோதி பலியானார்.

கும்மிடிப்பூண்டி, 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த ஜம்முதாவிபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வரகலாநாயுடு(வயது 45). கட்டிடத் தொழிலாளி. இவர், கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார். ஆனால் அவரது குழந்தைகள் மட்டும் சொந்த கிராமத்தில் உறவினர்கள் சிலரோடு வசித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இழந்த நிலையில் சொந்த கிராமத்துக்கு சென்று குழந்தைகளை பார்க்க வரகலாநாயுடு ஆசைப்பட்டார். மேலும் அவரது குழந்தைகளும் அவரை வீட்டுக்கு நேரில் வரும்படி போனில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், கட்டிடத் தொழிலாளி வரகலாநாயுடு, தனது மனைவி மற்றும் உறவினர்கள் என 6 பேருடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு நடந்து செல்ல திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு சாலை வழியாக புறப்பட்டு சென்ற அவர்கள், தமிழக-ஆந்திர எல்லையான பனங்காடு அருகே நடந்து சென்றால்கூட ஆந்திர மாநில போலீசார் அனுமதிப்பது இல்லை என்பதால் அந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றனர்.

ஏழுகிணறு பாலம் என்ற இடத்தில் ரெயில்வே மேம்பாலத்தின் மீது வரகலாநாயுடு நடந்து சென்றபோது, சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற சரக்கு ரெயில் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் அடிபட்ட வரகலாநாயுடு, தனது மனைவி மற்றும் உறவினர்கள் கண் முன்னேயே பாலத்திலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்து, அமரர் ஊர்தியில் வரகலாநாயுடு உடல் சொந்த கிராமத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

குழந்தைகளை பார்க்கும் ஆசையோடு சொந்த கிராமம் நோக்கி நடந்து சென்றவர், தற்போது தனது மனைவி மற்றும் உறவினர்களோடு பிணமாக செல்வது உறவினர் களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

Next Story