கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முதலாக ஓசூரில் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா உறுதி


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முதலாக ஓசூரில் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 25 April 2020 11:15 PM GMT (Updated: 25 April 2020 7:46 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முதலாக ஓசூரில் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ஊழியர்கள் அனைவரையும் அந்த நிறுவனம் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியது.

மேலும் அனைத்து ஊழியர்களையும் அந்த நிறுவனம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறியது. அதன்படி தனியார் நிறுவன ஊழியர் ஓசூரில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 34 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்றார். முதல் கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று இரவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு 2-வது, 3-வது கட்ட பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story