சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2,600 பேர் மீது வழக்கு


சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2,600 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 April 2020 10:30 PM GMT (Updated: 25 April 2020 8:50 PM GMT)

சேலத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை தெரிவித்தார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருப்பதை தடுக்க நேற்று முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகர் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் நேற்று சேலத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டதை கண்காணித்தனர். அப்போது, மாவட்ட கலெக்டர் அலுவலகம், அஸ்தம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் துணை கமிஷனர் தங்கதுரை நின்று கொண்டு முழு ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை எச்சரித்தார். சேலத்தில் 100 சதவீத ஊரடங்கு அமல்படுத்தியதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதன்படி சேலம் மாநகரில் 32 இடங்களில் போலீசார் மூலம் வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

சேலம் மாநகர எல்லைக்குள் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்ற வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் ஊரடங்கு பிறப்பித்த நாளில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 600 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாநகரை பொறுத்தவரையில் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். எனவே ஊரடங்கை மீறி வெளியில் தேவை இல்லாமல் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

Next Story