மேட்டூரில் இருந்து தர்மபுரிக்கு நடந்து வந்த 2 மூதாட்டிகள், குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு


மேட்டூரில் இருந்து தர்மபுரிக்கு நடந்து வந்த 2 மூதாட்டிகள், குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 29 April 2020 11:15 PM GMT (Updated: 29 April 2020 7:45 PM GMT)

மேட்டூரில் இருந்து தர்மபுரிக்கு நடந்து வந்த 2 மூதாட்டிகள் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தர்மபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 70). இவருடைய தங்கை லட்சுமி (68). ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு முன்பு சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஒரு கோவிலுக்கு வழிபாடு நடத்த சென்ற இவர்கள் 2 பேரும் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பாகவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு விட்டது.

இதன்காரணமாக ஓசூருக்கு நடந்தே செல்ல முடிவு செய்த இவர்கள் 60 கி.மீ.தூரம் நடந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரி வந்தனர். மூதாட்டிகள் 2 பேரையும் வருவாய்த்துறையினர் மீட்டு தர்மபுரியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் மலர்விழி உத்தரவுப்படி 2 மூதாட்டிகளின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தர்மபுரிக்கு வந்தனர். உரிய விசாரணைக்கு பின் தர்மபுரி தாசில்தார் சுகுமாறன் முன்னிலையில் 2 மூதாட்டிகளும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் மாதம்மாள் அரூர் அருகே உள்ள மத்தியம்பட்டிக்கும், லட்சுமி சேலம் மாவட்டம் தாரமங்கலத்திற்கும் அழைத்து செல்லப்பட்டனர்.

Next Story