தர்மபுரி மாவட்ட ரேஷன்கடைகளில் உணவு பொருட்கள் பெற டோக்கன் வினியோகம்


தர்மபுரி மாவட்ட ரேஷன்கடைகளில் உணவு பொருட்கள் பெற டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 2 May 2020 11:00 PM GMT (Updated: 2 May 2020 8:18 PM GMT)

தர்மபுரி மாவட்ட ரேஷன்கடைகளில் உணவு பொருட்கள் பெற டோக்கன் வினியோகம் செய்யப்பட உள்ளது.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மே மாதத்திற்கு உரிய ரேஷன்பொருட்களை விலையில்லாமல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் மத்திய அரசின் அந்தியோதயா, அன்னயோஜனா திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. நாளை (திங்கட்கிழமை) முதல் இந்த பொருட்கள் வழங்கப்படும். இதைபெற ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நாள், நேரம்,குறிப்பிடப்பட்டுள்ள டோக்கன்கள் ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதை பெற்று கொள்ளலாம். டோக்கன் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story