கொரோனா சந்தேகம்: கோவை ஆஸ்பத்திரிகளில் 63 பேர் அனுமதி


கொரோனா சந்தேகம்: கோவை ஆஸ்பத்திரிகளில் 63 பேர் அனுமதி
x
தினத்தந்தி 4 May 2020 10:25 PM GMT (Updated: 4 May 2020 10:25 PM GMT)

கோவை இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சந்தேகத்துடன் 63 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

கோவை,

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்படி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 146 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 135 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். மீதி 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் கோவை மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக தொற்று உறுதியாகவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் கொரோனா தொற்று சந்தேகத்துடன் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில 44 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 19 பேரும் ஆக மொத்தம் 63 பேர் ஆஸ்பத்திரியில் நேற்று சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 21 ஆண்கள், 40 பெண்கள், சிறுவர் ஒருவர், சிறுமி ஒருவர் ஆவார்கள்.

திருப்பூரை சேர்ந்தவர் குணமடைந்தார்

இதற்கிடையில் திருப்பூரை சேர்ந்த ஒருவர் குணம் அடைந்து இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். கோவையில் நேற்று முன்தினம் கொரேனா தொற்று உறுதியான 4 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தொற்று எப்படி ஏற்பட்டது என்று சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அவர்களோடு தொடர்புடையவர்கள் யார்? என்று விசாரித்து அவர்களின் சளி மாதிரிகளையும் சேகரித்து பரிசோதனைக்காக சுகாதாரத்துறையினர் அனுப்பி உள்ளனர்.

Next Story