ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவும் அபாயம்: ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை


ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவும் அபாயம்: ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 May 2020 10:15 PM GMT (Updated: 5 May 2020 8:47 PM GMT)

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 2 மி.மீட்டர் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

காற்று 6 கி.மீ. வேகத்தில் தெற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 80.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

கோடை வெப்பத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க நல்ல காற்றோட்டம் உள்ள கொட்டகைகள் மற்றும் மர நிழல்களில் அவற்றை பராமரிக்க வேண்டும். வெப்பத்தினால் ஏற்படும் அயற்சியை போக்கும் வகையில் கால்நடைகளுக்கு குறிப்பாக கறவை பசுக்கள் மற்றும் கருத்தரித்த வெள்ளாடுகளுக்கு எல்லா நேரத்திலும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் அசாமில் பன்றிகளுக்கு தீவிரமாக பரவி வருகிறது. இதன் இறப்பு விகிதம் 100 சதவீதம் ஆகும். இந்த வைரஸ் ஒரு பன்றியில் இருந்து அடுத்த பன்றிக்கு உமிழ்நீர், சுவாச குழாய் மற்றும் பூச்சிகள் பாதிக்கப்பட்ட பன்றிகளை கடித்த பிறகு உயிருடன் இருக்கும் பன்றிகளை கடிப்பதன் மூலம் பரவும் வாய்ப்பு உள்ளது.

இறந்த பன்றிகளை மற்ற பன்றிகள் உண்ணும்போது வைரஸ் அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு தடுப்பூசி கிடையாது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் பன்றிகள் வளர்ப்போர் பன்றி கொட்டகை மற்றும் இதர இடங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story