புதுச்சேரியில் லாரி டிரைவர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு


புதுச்சேரியில் லாரி டிரைவர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 May 2020 11:08 PM GMT (Updated: 7 May 2020 11:08 PM GMT)

புதுச்சேரியில் லாரி டிரைவர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி,

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து சென்றவர்களால் தமிழகத்தில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதைத் தொடர்ந்து காய்கறி மார்க்கெட்டுக்கு லாரிகளில் சரக்கு ஏற்றிச் சென்ற புதுவை லாரி டிரைவர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்

அதில் தற்போது புதுவை மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து அவர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விழுப்புரத்தை சேர்ந்தவர்

இதேபோல் விழுப்புரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருக்கவே ஜிப்மரில் பணிபுரியும் தனது தாயுடன் அங்கு சென்றுள்ளார். அவருக்கு அங்கு பரிசோதனை செய்ததில், நோய் தொற்று அறிகுறி இல்லை என்று கூறி அனுப்பி உள்ளனர். ஆனால் அவர் சந்தேகத்தின் பேரில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

5 ஆக உயர்வு

ஏற்கனவே புதுவையில் 2 பேரும், மாகியில் ஒருவரும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மேலும் 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புதுவை மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் விழுப்புரம் மாவட்ட பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

ரத்த சுத்திகரிப்பு

சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறிய தாவது:-

புதுவையில் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு விரைவில் இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற உள்ளது. அதில் நோய் குணமான அறிக்கைகள் வந்தால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். தற்போது புதியதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் நான்கு வருடங்கள் பணி புரிந்துள்ளார். அவருக்கும் புதுச்சேரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ரத்த சுத்திகரிப்புக்கு நாள்தோறும் தமிழக பகுதியில் இருந்து 250 முதல் 300 பேர் வருகிறார்கள். அவர்கள் தடையின்றி வந்து செல்ல விரைவில் நல்ல முடிவு எடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story