நெல்லை, தென்காசியில் பெண் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா: தனியார் மருத்துவமனை மூடப்பட்டது


நெல்லை, தென்காசியில் பெண் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா: தனியார் மருத்துவமனை மூடப்பட்டது
x
தினத்தந்தி 8 May 2020 11:30 PM GMT (Updated: 8 May 2020 9:42 PM GMT)

நெல்லை, தென்காசியில் பெண் உள்பட மேலும் 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி தனியார் மருத்துவமனை மூடப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் நேற்று முன்தினம் வரை 68 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் வள்ளியூர் பகுதி சித்தூரை சேர்ந்த 2 பேரும், மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவரும், பத்தமடையை சேர்ந்த பெண் ஒருவரும் அடங்குவர். சென்னையில் இருந்து சொந்த ஊரான சித்தூருக்கு வந்திருந்த டிரைவர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டில் உள்ள உறவினர்கள் 14 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 2 பேருக்கு தற்போது தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சித்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பத்தமடையை சேர்ந்த பெண் பிரசவத்துக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் தனது குழந்தையுடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இதையடுத்து அவர் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அனைவரும் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அந்த மருத்துவமனை மூடப்பட்டது. 28 நாட்களுக்கு மருத்துவமனை தனிமைப்படுத்தப்படும் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர். அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகளும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் மருத்துவமனை உள்ள பகுதி மூடப்பட்டு ‘சீல்‘ வைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டது. அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. திருக்குறுங்குடி அரசு சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பிரியதர்சினி தலைமையில் சுகாதார துறையினரும், இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா தலைமையில் போலீசாரும், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் தலைமையில் பேரூராட்சி பணியாளர்களும், தன்னார்வலர்கள், செஞ்சிலுவை சங்கத்தினரும் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது பாதிக்கப்பட்ட 4 பேரையும் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் நேற்று முன்தினம் மேலப்பாளையத்தை சேர்ந்த 83 வயது முதியவர் இறந்தார். 58 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 13 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதையொட்டி நெல்லை அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மேலும் ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமரம் பகுதியை சேர்ந்தவர்.

இவருடன் சேர்ந்து அந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 16 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதையடுத்து 31 பேர் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story