கல்குவாரி மீண்டும் செயல்பட தொடங்கியதற்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்


கல்குவாரி மீண்டும் செயல்பட தொடங்கியதற்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 May 2020 10:29 PM GMT (Updated: 9 May 2020 10:29 PM GMT)

கல்குவாரி மீண்டும் செயல்பட தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து செ.புதூர் கிராம மக்கள், தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ள செ.புதூர் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மலையை வெடி வைத்து உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது முட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ராமகிருஷ்ணன் (வயது 45) என்பவர் கம்பிரசர் உதவியுடன் துளைபோட்டபோது கல் சரிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் (கனிமவளம்) லட்சுமிப்பிரியா உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்த கல்குவாரி மூடப்பட்டது.

கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் அந்த கல்குவாரி செயல்பட தொடங்கியது. சில தொழிலாளர்கள் அந்த கல் குவாரிக்கு வேலைக்கு சென்றனர். இதனை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் அங்குள்ள கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்ததும் பெரியதச்சூர் போலீசார் அங்கு விரைந்து சென்று வீடுகளில் கட்டப்பட்ட கருப்புக்கொடிகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, கிராம மக்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி தெரிவியுங்கள் என்று பொதுமக்களிடம் போலீசார் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கல் குவாரி ஒப்பந்ததாரர் விதிமுறைகளை மீறி சக்திவாய்ந்த வெடி மருந்து பயன்படுத்தி பாறைகளை உடைப்பதன் மூலம் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு பாதுகாப்பாக வாழ முடியாத நிலை உள்ளது. எனவே விதிமுறையை மீறி செயல்படும் கல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Next Story