கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெற்றது


கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 13 May 2020 10:21 PM GMT (Updated: 13 May 2020 10:21 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது.

கடலூர்,

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமை தாங்கினார். கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (அதாவது நேற்று) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் என 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக அரிசி, மளிகை மற்றும் காய்கறிகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி

பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகளான செல்போன் பழுது பார்க்கும் கடைகள், துணிக்கடைகள், இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள், காய்கறி, மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை சுத்தம் செய்து கண்டிப்பாக கிருமிநாசினி தெளிக்க வேண்டும். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள பொது சுகாதார வளாகங்களை தூய்மையாக வைக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சென்னைக்கு சென்று வந்தவர்கள், பணி நிமித்தம் காரணமாக பிற மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கும், அவர்களை சார்ந்த குடும்ப நபர்களையும் காக்கும் வகையில் தனித்திருந்து நோய்த்தொற்று பரவாமல் மக்களை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்ற சமூக நோக்கில் செயல்பட வேண்டும்.

கிருமிநாசினி தெளிப்பு

மேலும் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சத்தான உணவுகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, கடலூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, கடலூர் ஒன்றியக்குழு தலைவர் தெய்வபக்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story