காரை ஏற்றி டிரைவரை கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்


காரை ஏற்றி டிரைவரை கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 15 May 2020 2:08 AM GMT (Updated: 15 May 2020 2:08 AM GMT)

வில்லியனூர் அருகே டிரைவரை காரை ஏற்றி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரமடைந்து இந்த கொடூர சம்பவம் நடந்து இருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த காட்டேரிக்குப்பத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 35). தொண்டமாநத்தம் அரசு உதவிபெறும் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு புவனேஸ்வரி (29) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி இரவு தொண்டமாநத்தம் பகுதியில் வேலையை முடித்து விட்டு, தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கந்தசாமி வந்தார்.

அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கணவன் இறந்த பின்னர் புவனேஸ்வரி முன்பைவிட மகிழ்ச்சியாக இருந்ததும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஸ்ரீதர் என்கிற அஜித்குமார் (24) என்பவர் புவனேஸ்வரி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதும் கந்தசாமியின் உறவினர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது.

கள்ளக்காதல்

இதனையடுத்து கந்தசாமி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி, விபத்திற்கு பின் தலைமறைவாக இருந்த லிங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமாரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த அஜித்குமார் சொல்லியே வாடகை கார் மூலம் கந்தசாமி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கந்தசாமிக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த அஜித்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வந்தனர். கந்தசாமி வெளியூர் செல்லும்போது தனது நண்பரை நம்பிக்கையுடன் வீட்டு காவலுக்கு விட்டு சென்றுள்ளார். இதில் அஜித்குமாருக்கும், கந்தசாமி மனைவி புவனேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தனர். இது கந்தசாமிக்கு தெரியவந்தது.

தகராறு

இந்த நிலையில் ஒருநாள் கந்தசாமி வேலை விஷயமாக தொண்டமாநத்தம் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அஜித்குமாரும், புவனேஸ்வரியும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கந்தசாமி அவர் களை நிறுத்தி கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கந்தசாமியை அஜித்குமார் தாக்கியுள்ளார்.

இது குறித்து கந்தசாமி வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது அங்கு வந்த புவனேஸ்வரியின் சகோதரர் குமாரவேலு தனது தங்கையை எப்படி காவல் நிலையம் வரை அழைத்து வரலாம் என்று கேட்டு புவனேஸ்வரியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

கார் ஏற்றி கொலை

இந்த நிலையில் கந்தசாமி, குமாரவேலு வீட்டுக்கு சென்று தனது மனைவியை குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அப்போது புவனேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கந்தசாமியை தாக்கி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் கந்தசாமி புகார் செய்தார். ஆனால் போலீசார் அவர் களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அஜித்குமார், தனது கள்ளக்காதலி புவனேஸ்வரியை சந்திக்க முடியாமல் தவித்தார். இது குறித்து தனது நண்பர் பிரவீன் குமார் என்பவரிடம் தெரிவித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். இதையடுத்து புவனேஸ்வரி, அவரது கள்ளக்காதலன் அஜித்குமார், பிரவீன்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து கந்தசாமியை காரை ஏற்றி கொலை செய்து விபத்து போல் நாடகமாடுவது என முடிவு செய்து அதன்படி சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிய கந்தசாமியை பிரவீன்குமார் காரை ஏற்றி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கொரோனா பரிசோதனை

இதனைத்தொடர்ந்து புவனேஸ்வரி, கள்ளக்காதலன் அஜித்குமார், டிரைவர் பிரவீன்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனையின் முடிவு வந்த பின்னர் அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்து விபத்து நாடகமாடிய சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story