திருப்பூர் மார்க்கெட்டில் மீன் விற்பனை அமோகம் 30 டன் விற்று தீர்ந்தது


திருப்பூர் மார்க்கெட்டில் மீன் விற்பனை அமோகம் 30 டன் விற்று தீர்ந்தது
x
தினத்தந்தி 18 May 2020 4:05 AM GMT (Updated: 18 May 2020 4:05 AM GMT)

திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் இரவு ஆந்திராவில் இருந்து 30 டன் வளர்ப்பு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் இரவு ஆந்திராவில் இருந்து 30 டன் வளர்ப்பு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலெக்டரின் உத்தரவுப்படி இரவு விற்பனை மட்டுமே நடைபெற்றது. அதுவும் மொத்த விற்பனையாளர்களுக்கு மட்டுமே மீன் விற்பனை செய்யப்பட்டது.. சில்லறை விற்பனை இல்லாததால் பொதுமக்கள் யாரும் மீன் வாங்க அனுமதிக்கப்படவில்லை.

இதுகுறித்து மீன் மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

நேற்று முன்தினம் இரவு 9 மணிமுதல் நேற்று காலை 5 மணிவரை மட்டுமே மொத்த விற்பனை நடைபெற்றது. 30 டன் மீன்களும் விற்று தீர்ந்து விட்டன. கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ கட்லா ரூ.180-க்கும், ரோகு ரூ.160-க்கும், மிருகால் ரூ.160-க்கும், அணைபாறை ரூ.180-க்கும்,நெய் மீன் ரூ.100-க்கும் விற்பனையானது. விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது என்றனர்.இதேபோல் திருப்பூர் சி.டி.சி.டெப்போ அருகில் உள்ள மீன் கடைகளிலும் மீன் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

அதேபோல இறைச்சிகடைகளில் ஆட்டு இறைச்சிக்கு அதிக கிராக்கி உள்ளதால் பெரும்பாலான கடைகளில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்படவில்லை. ஒரு சில கடைகளில் மட்டுமே ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கோழி இறைச்சி கிடைப்பதிலும் சிரமம் இருப்பதால் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.

Next Story