திருப்பூர், சேவூரில் விதிகளை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை


திருப்பூர், சேவூரில் விதிகளை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 May 2020 4:16 AM GMT (Updated: 18 May 2020 4:16 AM GMT)

திருப்பூர் மற்றும் சேவூர் பகுதியில் விதிகளை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என்பது குறித்து திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள கடைகளில் மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் தலைமையில் சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சீல் வைப்பு

அப்போது அந்த பகுதியில் உள்ள மீன்கடையின் பின்புறம் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றது தெரிய வந்தது. மேலும் அந்த கடை சுகாதாரமின்றி செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மீன்கடையை பூட்டி சீல் வைத்தனர். கடைகளில் பொருட்கள் வாங்க வெளியில் வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் உதவி கமிஷனர் செல்வநாயகம் தெரிவித்தார். இதேபோல் கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குறிப்பாக இறைச்சி கடைகளில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சேவூர்

அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேவூர் கைகாட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரி, ஒரு செல்போன் கடை, ஒரு துணிக்கடையில் சமூக இடைவெளி மற்றும் அரசின் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவதையடுத்து 3 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்து அவினாசி சுகாதார ஆய்வாளர் கலைச்செல்வன் முன்னிலையில் அந்த கடைகள் மூன்றையும் பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல் கணக்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பெருமாநல்லூர் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கணக்கம்பாளையம் பிரிவில் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் விற்பனை செய்து வந்த சிவகுமார்(45), சதீஷ் (36) என்பவர்களுக்கு சொந்தமான இறைச்சி கடைகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், ஊராட்சி செயலர் செந்தில்குமார், பெருமாநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் தலைமையில் 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.


Next Story