காஞ்சீபுரம் அருகே வாலிபர் குத்திக்கொலை - 4 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே வாலிபர் குத்திக்கொலை - 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 May 2020 11:15 PM GMT (Updated: 20 May 2020 8:32 PM GMT)

காஞ்சீபுரம் அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலை யில் இவர் நேற்று முன்தினம் காஞ்சீபுரம் அருகே ஏனாத்தூர் சுடுகாடு அருகே குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது, உடனடியாக அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அஜித்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை ஏரிக்கரை அருகே 4 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் செட்டியார்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் (வயது 24), காஞ்சீபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்கிற காக்கா சுரேஷ் (29), செட்டியார்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் (24), பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த சூர்யா (21) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்:-

அஜித்குமார் ஏனாத்தூர் சுடுகாடு அருகே மது குடித்து கொண்டு இருந்தார். நாங்கள் 4 பேரும் அந்த வழியாக வந்தோம். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அஜித்குமாரை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தோம்.

இவ்வாறு அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story